Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாத பிறப்பு அமாவாசை  பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்

ஜுலை 17, 2023 06:07

இராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாத பிறப்பு அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில். இத்திருக்கோவிலில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். மேலும் 18 சித்தர்களும் இங்கு வந்து இந்த சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்ததாகவும் இன்னும் ஏராளமான சித்தர்கள் அரூபமாக இப்பகுதியில் சுற்றியும் வருகின்றனர். 

இத்திருக்கோவிலுக்கு செல்வதற்கு மதுரை மாவட்டம் சாப்டூர், விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை ஆகிய இரு வழிகள் இருந்தாலும் பிரதான வழியாக விருதுநகர் மாவட்ட வழியாக செல்லும் தாணிபாறை பாதையையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு முன்பு வருடம் முழுவதும் திருக்கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கிற்க்கு பின் மாதம் தோறும் பிரதோஷம், சிவராத்திரி அமாவாசை, பௌர்ணமி ஆகிய தினங்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று ஆடி மாத பிறப்பு அமாவாசை தினத்தை முன்னிட்டு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரகணக்கான பக்தர்கள் தாணிப்பாறை அடிவாரத்தில் குவிந்தனர்.

மேலும் காலை 7 மணி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மலையேறும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்ற கடும் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

முன்னதாக இன்று ஆடி அமாவாசை தினம் என்று பக்தர்கள் நினைத்து வந்த நிலையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தான் ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடப்படுவதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

தலைப்புச்செய்திகள்